Saturday 24 November 2012

NALADIYAR BASED MORAL STORY-9


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

சினமின்மை
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


நமது நாட்டின் சுதந்திரப் போர் நடந்து கொண்டிருந்த சமயம். பல சத்யாக்ரகிகள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தனர்.
சிறையைப் பார்வையிட ஒரு மேலதிகாரி அன்று வருவதாக இருந்தது. அவர் கண்டிப்பானவர் என்பதால் சிறை ஊழியர்கள் சற்று பரபரப்பாக இருந்தனர். மதிய நேரம், அந்த மேலதிகாரி வந்தார். கைதிகளை அவர் விசாரிக்கும் தோரணையிலிருந்தே, அவர் முரட்டுத்தனமானவர் என்பதும் புரிந்தது.
ஒரு சுதந்திரப் போராட்ட வீரர், ஒரு இடத்தில் அமர்ந்து ஏதோ வேலையில் மும்முரமாக மூழ்கியிருந்ததால், இந்த அதிகாரி வந்ததை கவனிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அந்த ஆங்கிலேய அதிகாரி, தனது பூட் காலினால் அந்த வீரரை எட்டி உதைத்தார்.
கீழே விழுந்த வீரர் எழுந்து, “மன்னித்து விடுங்கள், தாங்கள் வருவதை நான் கவனிக்க வில்லை” என்றார். ஆனாலும், அந்த அதிகாரி ஆத்திரம் அடங்காமல் கன்னாபின்னாவென்று கத்திவிட்டு சென்றார்.
பிறகு, எல்லா வேலைகளும் வழக்கம் போல நடந்து கொண்டிருந்தன. ஆறு மாதங்கள் கழித்து, அதே அதிகாரி மறுபடியும் ஆய்வு செய்ய வரப்போகிறார் என்றதும் பரபரப்பு.
அதே சத்யாகிரகிகள் அந்த சிறையில் இருந்தனர். கைதிகளின் உணவின் தரத்தைக் குறையுங்கள், இவர்களுக்கு ஏன் உப்பிட்ட உணவு என்றெல்லாம் பொறுப்பற்ற வகையில் உத்தரவிட்டுக் கொண்டே வந்தார்.
ஒரு இடத்தில், ஒரு கைதி இவரைப் பார்த்து புன்னகைத்தார். அவரை இவருக்கு நினைவில்லை. “நீ யார், ஏன் இங்கு நிற்கிறாய்?” என்று கேட்டார் அதிகாரி.“தங்களுக்கு ஒரு பரிசு வைத்துள்ளேன், நானே செய்த காலணி இது” என்றார்.
அந்த ஆங்கிலேய அதிகாரி விரும்பவில்லை யென்றாலும், வேண்டா வெறுப்பாய் வாங்கிப் பார்த்தார். கால் அளவு மிகச்சரியாக இருந்தது.
எனது அளவு எப்படி தெரியும் என்று ஆச்சரியத்தார் அதிகாரி.
“சென்றமுறை தாங்கள் இங்கு வந்திருந்த பொழுது, தங்களது பூட் காலால் என்னை உதைத்து தள்ளினீர்கள். அந்தத் தடம் எனது சட்டையில் நன்றாக பதிந்தது” என்றார்.
அந்த அளவைக் கொண்டுதான் இந்த காலணியை உருவாக்கினேன் என அமைதியாகக் கூறினார் அந்தக் கைதி.
அதைக் கேட்டு அந்தக் கடுமையான அதிகாரியின் மனமும் இளகியது. அது முதல் அவர் யாரிடமும் கடுஞ்சொற்கள் கூட கூறுவதில்லை.

மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.              நாலடியார் - 61
விளக்கம்: தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது

கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக்
கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
மேன்மக்கள் தம்வாயால் மீட்டு                                             நாலடியார் – 70
விளக்கம்: நாய் தமது உடம்பைக் கடிப்பதைப் பார்த்தும், தம் வாயினால் நாயைக் கடித்தவர்கள் இவ்வுலகில் இல்

 கீழ் மக்கள் கீழ்த்தரமான சொற்களைச் சொல்லும்போது மேன் மக்கள், அவர்களுக்கு எதிராக அச்சொற்களைத் திருப்பிச் சொல்வார்களோ?.

Saturday 17 November 2012

NALADIYAR BASED MORAL STORY-8


STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


த்யானம் 
ஜிநசந்திரன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவர். ஆதிபகவனின் சிறந்த பக்தர்.
ஆதீஸ்வரர் ஆலயம் இருக்கும் தெருவில்தான் அவரது வீடும் இருந்தது. தினமும் ஆலயம் செல்வார். வழிபடுவார். கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வார். கோவிலுக்கு வருபவர்களிடம் அன்பாக பழகுவார். அவர்களுக்கு ஏதேனும் தேவையென்றால் முகம் சுழிக்காமல் உதவி செய்வார்.
அந்த நல்லவருக்கு, ஒரு மனக்குழப்பம். தன்னால் அமைதியாக அமர்ந்து த்யானம் செய்ய முடியவில்லையே என்கிற கவலை.
ஒருநாள் மாலை ஜிநாலயத்திற்கு அருகில் ஓடும் ஆற்றின் படித்துறை ஒன்றிற்கு சென்றார். அந்த மாலை நேரத்தில் எவரும் ஆற்றிற்கு வர மாட்டார்கள் என நினைத்தார்.
அந்த இடம் அமைதியாக இருந்ததால், த்யானம் செய்ய ஏற்ற இடம் என்று அவருக்கு தோன்றியது, அங்கேயே அமர்ந்து, “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார். அப்பொழுது, ஒரு பெண் அங்கே குளிக்க வந்தாள்.

உடனே, ஜிநசந்திரன் கண்களை மூடிக்கொண்டு, “ஓம் ஜிநாய நம” என்று சொன்னார். அந்தப் பெண் அருகே வருவது அவளது கொலுசின் ஓசையால் அறிய முடிந்தது.
அட என்னது இது? என்று நினைத்துக் கொண்டு, இரு கைகளாலும்  காதுகளை மூடிக்கொண்டார். அதற்குள் அவள் அருகாமையில் வந்து விட்டாள், அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை வாசம் வந்தது.
இதனால் சலிப்படைந்த ஜிநசந்திரன், தனது தோளில் போட்டிருந்த அங்க வஸ்திரத்தை (துண்டு) எடுத்து கண், காது, மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார்.
“அந்தப் பெண் போயிருப்பாளோ, எதுவும் அறிய முடியவில்லையே” என்று நினைத்தார்.
புரிந்ததா! அவரால் ஏன் த்யானம் செய்ய முடியவில்லை என்று.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.                     நாலடியார் – 59

Meaning:மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான்

Sunday 11 November 2012

Naaladiyar Based Moral Story-7


றந்தும் வாழ்பவர்கள்

ஒரு ஊரில், வீரசேனன் என்கிற செல்வந்தர் வாழ்ந்து வந்தார், செல்வந்தரென்றாலும் கஞ்சர். எச்சில் கையால் காக்கை ஓட்டாத மனிதர் என்று சொல்வார்களே அதைப் போன்றவர்.
அவர் தினமும் தனது கஜானாவில் (கருவூலத்தில்) சேர்ந்துள்ள காசு, பணம், நகை மூட்டைகளை கணக்கிட்டு வைத்துக் கொள்வார்.
அதே ஊரில், ஜெயசேனன் என்பரும் வாழ்ந்தார். அவர் ஒன்றும் செல்வந்தர் இல்லை. ஆனாலும் தனக்கு கிடைக்கும் திரவியத்தைக் கொண்டு, தானும் சிக்கனமாக செலவு செய்து பிறருக்கும் தேவையானவற்றை தானமாகத் தருவார்.
கோடைக்காலங்களில் வழிப் போக்கர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பந்தல் அமைப்பார் ஜெயசேனன். அதற்கு தண்ணீர் கொண்டு வர வேலையாள் ஒருவரையும் அமர்த்தி, அவருக்கு சம்பளமும் கொடுத்தார்.
“ஏன், நீ சம்பாதித்த பணத்தையெல்லாம் இவ்வாறு வீணடிக்கிறாய், தண்ணீர் குடித்த எவரும் உனக்கு எவ்விதத்திலும் உதவ மாட்டார்கள்” என்று செல்வந்தரான வீரசேனன், ஜெயசேனனுக்கு அறிவுரை கூறினார்.
இந்த அறிவுரையைப் பொருட்படுத்தாது, ஜெயசேனன் தொடர்ந்து அறப்பணிகளில் தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழித்தார்.
ஒருநாள், வழக்கம் போல வீரசேனன் தனது கருவூலத்தில் நகை, பண இருப்புகளை சரிபார்க்கும் பொழுது ஒரு மூட்டை பணம் குறைவதாக தோன்றியது. உடனே, அவருக்கு வியர்த்தது, பேச்சு வரவில்லை. சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்.
வீரசேனன் இறந்ததை கேள்விப் பட்டு, ஜெயசேனன் வருத்தப்பட்டார். பிறகு, தண்ணீர் பந்தலுக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அது போதாதென்று நினைத்தவர், அங்கே ஒரு கிணறு ஒன்றினையும் ஏற்படுத்தினார். இதனால், நிரந்தரமாக எப்பொழுதும் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழி கிடைத்தது.
அப்பொழுது, தண்ணீர் பந்தலுக்கு தினமும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிய நபர், “ஏனிப்படி செய்தீர்கள், எனக்கு இனி வேலையில்லையே! நான் என்ன செய்வேன்” என்று கேட்டார்.
அதற்கு ஜெயசேனன், “நிறைய பணம் வைத்திருந்த வீரசேனன் யாருக்கும் தராமல் பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனான், புல் நுனியிலுள்ள நீர்த்துளி போன்று நிலையில்லாத் தன்மையுடையது இந்த வாழ்க்கை; அது போல் நானும் இறந்து போனால், இந்தத் தண்ணீர் பந்தல் இல்லாது போகும், அதற்காகவே எனது இறப்பினாலும் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்தேன். கவலைப் படாதே, இந்தக் கட்டிடத்தையும், கிணற்றையும் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் உன்னை அமர்த்துகிறேன்” என்றார்.
உணர்ச்சிப் பெருக்கிட்ட அந்த வேலையாள், “அய்யா, உங்களுக்கு மறைவே இல்லை. நீங்கள் இறந்தபின்னும் வாழ்வீர்கள்” என்று வாழ்த்தினான்.

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்            நாலடியார் – 29


விளக்கம்: ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க

Naladiyar is the collection of poems (400 in numbers) created by Jain monks. This naladiyar is made simple by these stories.