Saturday 15 December 2012

NALADIYAR BASED MORAL STORY-12 யார் சிறந்தவர்?


Hi,
This is Sri.Vishal.
I hope you may enjoy the story.
The story is based on the moral advocated by Quatrains composed by Jain Saints.
In an effort to generalise the morals in a simple way, these stories are published at the rate of one per week.
Please read and appreciate us to encourage my effort.
Thank you.
Sri.Vishal

யார் சிறந்தவர்?
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, மாணவர்கள் பள்ளிக்கு வந்திருந்தனர். விடைத்தாட்களைத் திருத்தி, மதிப்பெண்களை தெரிவிக்கப் போகிறார் ஆசிரியர். அனைத்து மாணவர்களுக்கும் விதவிதமான எதிர்பார்ப்புகள். சிலருக்கு கவலை, சிலருக்கு ஆர்வம்.
விஷால் என்கிற மாணவன், கணிதத் தேர்வில் 100 மதிப்பெண்களை எதிர்பார்த்தான்.
எதிர்பார்த்த படி, கணித வகுப்பில் ஆசிரியர் வந்து அனைவருக்கும் விடைத்தாட்களைக் கொடுத்தார். விஷால் 98 மதிப்பெண்கள் எடுத்து முதல் மாணவனாக வந்திருந்தான். ஹரி என்பவன் 96 மதிப்பெண்கள் எடுத்திருந்தான். வெங்கட் என்பவன் 76 மதிப்பெண்கள் எடுத்திருந்தான்.
விஷாலுக்கு 100 எடுக்க முடியவில்லை என்கிற வருத்தம் இருந்தாலும், முதல் இடத்தைப் பிடித்ததனால் மகிழ்ச்சி.
அடுத்ததாக, ஆசிரியர் பேசினார், “கணிதப் பாடத்தில் சிறந்த மாணவனாக வெங்கட் திகழ்கிறான், அனைவரும் அவனை கைதட்டி பாராட்டுங்கள்” என்றார்.
அதைக் கேட்டதும், விஷாலுக்கு அதிர்ச்சி. ஆசிரியரிடம் காரணத்தை வினவினான். “ஐயா, நான் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன், வெங்கட்டோ 76 மதிப்பெண்கள் வாங்கியுள்ளான், ஆனால் அவன்தான் சிறந்தவன் என்று ஏன் கூறுகிறீர்கள்”
அதற்கு ஆசிரியர், மிகவும் சிக்கலாய்ப் போன  நூல் கொத்து ஒன்றைக் கொடுத்து, “இந்த சிக்கலைப் பிரித்து, நூல் கண்டாக்கி நாளை கொண்டு வா, பிறகு ஏன் என்று காரணம் சொல்கிறேன்” என்றார்.
விஷாலுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், வாங்கிக்கொண்டான். மாலை வீட்டிற்கு வந்தவுடன், நூலில் சிக்கலை எடுக்க அமர்ந்தான். இரவு வெகு நேரமாகியும், அவனால் சிக்கலை சரி செய்ய முடியவில்லை. மிகவும் தளர்ந்து விட்டான். பாதிக்கு மேல் சிக்கலை எடுத்தவுடன், அப்படியே புத்தகப் பையில் வைத்துவிட்டு தூங்கிவிட்டான்.
மறுநாள் பள்ளிக்கு சென்றான். எந்த வகுப்பிலும் வீட்டுப் பாடம் எழுத வில்லை. எல்லா ஆசிரியர்களிடமும் திட்டு வாங்கினான்.  கணித ஆசிரியரை காரணம் கேட்டதால் வந்த வினை, நூல் கண்டு  இல்லை யென்றால், இந்த ஏச்சுக்கள் இருக்காது என்று நினைத்தான்.  வெங்கட் மீது எரிச்சலும் கோபமும் வந்தது.

கணித வகுப்பு நேரத்தில், கணித ஆசிரியர் வந்தார். விஷால் வேண்டா வெறுப்பாய் அங்கு உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் நூலின் சிக்கலை எடுத்து விட்டாயா என்று கேட்டார். பாதி நூல் கண்டு செய்து விட்டேன் என்றான்.
நல்லது, வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டாயா என்றார். இல்லை, பாதி சிக்கலை எடுப்பதற்கே இரவு வெகு நேரம் ஆகிவிட்டது, எனவே, வீட்டுப்பாடங்களை எழுத முடியவில்லை என்றான்.
“இந்த சிக்கலை எடுப்பது போன்றதுதான், வெங்கட்டின் வாழ்க்கையும். தினமும் மாலையில் வீட்டிற்கு சென்றபின், வீட்டில் அவனது தந்தைக்கு உதவியாக வேலை செய்வான். பின் அவனது தாய்க்கு ஒத்தாசையாக இருப்பான். பிறகுதான், படிப்பைப் பற்றியே யோசிக்க வேண்டும்” என்றார்.
மேலும், “உனக்கு அப்படியல்ல, படிப்பதற்கு தனியறை, தனியாக மேசை, நாற்காலி. உன் வீட்டில் அதிக பட்ச ஒலியே தொலைக்காட்சி ஒலிதான், அதையும் உன்னால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால், வெங்கட்டுக்கு மொத்த வீடுமே ஒரே ஒரு அறைதான். அதுதான் கூடம், சமையலறை, படுக்கையறை எல்லாம்”
“அவன் வீட்டிற்கு வெளியே செல்லும் வாகனங்கள், கால் நடைகள், மனிதர்களின் இரைச்சலும், கூப்பாடுகளும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் படிப்பது என்பதே பெரிய விஷயம்; ஓரளவு தேர்ச்சி என்பது அதிசயம். ஆனால், 76 மதிப்பெண்கள் எடுப்பதென்பது மிக மிக அரிதான ஒன்று.”

“எனவேதான், நீ 98 மதிப்பெண்கள் எடுத்தாலும், அதைவிட 76 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்த வெங்கட்டை சிறந்த திறமையானவன் என்று கூறினேன், உனது திறமையை குறைவாக மதிப்பிடவில்லை, கவலைப் படாதே” என்றார்.
இதைக் கேட்டு தெளிவடைந்த விஷால், வெங்கட் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியை மறந்து, அவனிடமும் நட்பு கொண்டான்.



களர்நிலத் துப்பிறந்த உப்பினைச் சான்றோர்
விளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினும் கற்றறிந் தோரைத்
தலைநிலத்து வைக்கப்படும்.        நாலடியார்    133


விளக்கம்: களர் நிலத்தில் உருவாகிய உப்பினை சான்றோர், நல்ல நஞ்சை நிலத்தில் விளைந்த நெல்லினை விட மேன்மையாகக் கருதுவர்.
அதுபோல, கீழ்குடியிற் பிறந்தவர் என்றாலும், கற்றறிந்தவராயின் அவரை மேலான குடியிலும் உயர்ந்த இடத்தில் வைத்து மதிக்க வேண்டும்.

3 comments:

  1. கதைகள் நன்றாக உள்ளன,

    ReplyDelete
  2. நாலடியாரை நற்றமிழில் எளிமையாக உரைத்துள்ளீர்......

    ReplyDelete