Saturday 23 February 2013

Naaladiyaar story 18 பக்தி


18 பக்தி
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM



18 பக்தி
சிரேணிகன் என்கிற குரு ஒருவர் இருந்தார், அவருக்கு பல பணக்கார சிஷ்யர்களும், பக்தர்களும் இருந்தனர். அவர்கள் இல்லங்களில் ஆடம்பரமான பூஜைகளை நடத்தி வைப்பார். எப்பொழுதும் பிஸியான சாஸ்திரியாகவே இருந்தார்.
அன்று தீபாவளிக்கு மறுநாள், லக்ஷ்மி பூஜையை பல பக்தர்கள் வீட்டில் அடுத்தடுத்து செய்வதாக ஏற்பாடு. ஒரு ஏழை பக்தன், தனது வீட்டிலும் பூஜை செய்ய வருமாறு அன்புடன் அழைத்தான்.
குருவோ, “ஏழைக்கு எதற்கப்பா ஆடம்பரமான லக்ஷ்மி பூஜை, நன்றாக நீராடி விட்டு ஓம், ஓம் என்றோ, நமோ நமோ என்றோ சொல்லிக் கொண்டே லக்ஷ்மி பெயரையும் சொல்ல வேண்டியதுதானே” என்றார்.
அவர் இளக்காரமாக சொல்கிறார் என்பது புரியாமல், அந்த ஏழையும் வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு லக்ஷ்மி நமோ என்று சொல்லிக் கொண்டே இருந்தார் நம்பிக்கையுடன்.
அன்று மாலை, ஒரு பிச்சைக்காரக் கிழவி அந்த ஏழை வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டாள். ஏழை வீட்டில், ஒரேயொரு சீப்பு வாழைப்பழம் தவிர வேறு எதுவும் இல்லை; அந்த வாழைப் பழத்தினை கொடுத்தார். அந்தக் கிழவி, லக்ஷ்மி தேவியாக உருமாறி பல வரங்களை ஏழைக்கு அருளினாள், ஏழை செல்வந்தரானார். தனக்கு வழி காட்டிய!? குருவிற்கு காணிக்கை கொடுக்க சென்றார்.
அப்பொழுதுதான் குருவிற்கு புரிந்தது, “ஆடம்பரத்தில் இல்லை பக்தி, எளிமையிலும், நோக்கத்திலும், தூய்மையிலும்தான் தெய்வம் வாழ்கிறது” என்பது.

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு                     நாலடியார்  91

பொருள்: பொருள் இல்லாதபோதும் தம்மால் இயன்ற அளவு பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து இயல்பாகக் கொடுக்கும் குணமுள்ள மக்களுக்கு மறுமை உலகக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்                    நாலடியார் 172

பொருள்: அறத்தின் நெறியை அறியுங்கள்! எமனுக்கு அஞ்சுங்கள்! அறியார் கூறும் கடுஞ் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! வஞ்சனைக் குணம் உங்களிடம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்! தீயோர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பொ¢யோர் அறவுரைகளைக் கேளுங்கள்

Saturday 16 February 2013

NALADIAR BASED STORY 16 வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்


16 வாழ்க்கையில் இதுவெல்லாம் சகஜம்
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

EXPLANATION TO THE POEM Prof.J.SRI CHANDRAN

அது ஒரு திருமண வைபவம். திருமணம் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது, விழாவிற்கு வந்தவர்கள் கூட்டமாய் கூடி உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அதில் ஒரு குழாமில், நடு நாயகமாக அண்ணாசாமியப்பன்  என்பவர் அமர்ந்திருந்தார்; மற்றவர்களும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர். கேட்பதற்கு ஆட்கள் இருந்ததால் அண்ணாசாமியப்பனும் தான் எல்லாம் தெரிந்தவர் போல பெருமை சாற்றிக் கொண்டிருந்தார்.
நீதிபதி ஒருவரை தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், அவர் முன்னாளில் சாதாரண வக்கீலாக இருந்த பொழுது, வழக்குகள் கிடைக்காமல் இருந்ததாகவும், இவர்தான் அவருக்கு உதவிகள் செய்ததாகவும் கூறிக்கொண்டார்.
அப்பொழுது, அதை உண்மையென்று நம்பிய ஒருவர், தனக்கு முதியோர் உதவி பணம் அரசாங்கத்திடமிருந்து வரவில்லை, வட்டாட்சி அலுவலகத்தில் மனு செய்து செய்துள்ளதாகவும், அங்கே யாரையாவது தெரியுமா என்று வினவினார். தனக்கு வட்டாட்சியரை நன்றாகத் தெரியும் என்றார்; உடனே வேறொருவர் தான் பட்டாவிற்கு மனு செய்துள்ளதாகச் சொன்னார்.
இவ்வாறாக ஆளாளுக்கு ஏதோதோ கூற, நம்மவரும் நிறைய வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டே வந்தார். ஒருவர் மட்டும் எதுவும் கேட்கவில்லை, அமைதியாகவே இருந்தார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா என்றார் அண்ணாசாமியப்பன்.
“ஆமாம், ஆனால் தனிமையில்தான் சொல்லவேண்டும்” என்றார்; “சரி, வாருங்கள்” என்று தனியாக அழைத்துச் சென்று நமது ஜம்பப் பேர்வழி, “இப்பொழுது சொல்லுங்கள்” என்றார்.
அந்த புதிய மனிதர், “நான்தான் இந்த ஊருக்கு தாசில்தார், அதாவது வட்டாட்சியர்” என்றார்.
அண்ணாசாமியப்பனுக்கோ, ஒருவேளை இவரும் தன்னைப் போலவே ஒரு பொய்ப் பேர்வழியாக இருப்பாரோ என்று சந்தேகம்; அப்படியென்றால் முன்னரே கூறியிருக்கலாமே என்று கேட்டார்.
அந்த நபர், “அவைக்கு நடுவில் சொன்னால், உங்களுக்கு மான நட்டம் உருவாகும், எனக்கு அது நோக்கமல்ல; இனிமேலும் இது போன்ற புரட்டுகளில் ஈடுபடாதீர்கள்” என்று அறிவுறுத்தி எச்சரித்தார்.
அப்பொழுது அவரின் பெருந்தன்மை புரிந்தது.

புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து                         நாலடியார்  155

பொருள்: கல்வியறிவு இல்லாத பயனற்ற வீணர் அவையில் நூல்களைக் கல்லாத ஒருவன் பொருத்தமில்லாமல் உரைப்பனவற்றையும் (அறிவுடையோர்) அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டினால், அவன் பல்லோரிடை அவமானப்பட நேரிடும் என்பதற்காக இரங்கி, மனம் வருந்தினாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருப்பர்

Wednesday 6 February 2013

NALADIYAR BASED STORY 17 எது சிறந்த அரசு?


எது சிறந்த அரசு?
STORY BY Engineerr/Lawyer.A.SRI VIJAYAN
BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


நம் இந்திய நாட்டின் இரு அண்டை மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர்கள் ஆண்டு வந்தனர். ஒரு மாநிலம் நல்ல வளமாய் இருந்தது. செழிப்பான விவசாயம், விளைச்சல், தொழிற்சாலை, வளமான வர்த்தகம், அறிவார்ந்த மக்கள் என்று அமோகமாய் இருந்தது.
மற்றொரு மாநிலத்தில் நல்ல அளவான மழை பெய்தது. ஆனாலும், நல்ல விளைச்சல் இல்லை. கலையில்லா முகத்துடன் மக்கள் ஏழ்மையில் இருந்தனர். முதலமைச்சருக்கு வருத்தம், இருண்ட சூழ்நிலையிலிருந்து மாநிலத்தையும், மக்களையும் காப்பாற்ற முடியவில்லையே என்கிற ஏக்கம். மாநிலத்தின் முதலமைச்சரும் இலவசத் திட்டங்கள் நிறைய அறிவித்தார். மக்களும் அந்த இலவசங்களை பெற்றனர்.
இந்தச் சூழ்நிலையில் ஒருநாள், மாநில முதல்வர்களின் மாநாடு தலைநகர் தில்லியில் நடந்தது. இரு மாநில முதல்வர்களும் அங்கே சந்தித்துக் கொண்டனர்.
இரண்டாம் மாநிலத்தின் முதல்வர் தன்னைப் பற்றி பெருமையாய் சொல்லிக் கொண்டார். தான் இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்றும்; தன் மக்களுக்கு பல நல்ல இலவசத் திட்டங்களை அறிவித்து சிறப்பானதாக தன் அரசினை நடத்துவதாகவும் பெருமை பேசினார்.
முதலாமவர், “நீங்கள் சொல்வது சரிதான், எங்களுக்கு அது மாதிரி ஒரு வாய்ப்பே கிடைக்க வில்லை. அது மாதிரி யாசகம் பெறுவதற்கு எங்கள் மாநிலத்தில் யாருமே இல்லை” என்றார் அமைதியாக.
சுரீர் என்றது அடுத்தவருக்கு;  உழைத்து முன்னேறுவதற்கு வாய்ப்பை  ஏற்படுத்தித் தராமல் மக்களை சோம்பேறியாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தார்.
உண்மையில் சிறந்த அரசு என்பது ஏழைகள் இல்லாமல் ஆக்குவதுதானே தவிர ஏழைகளுக்கு இலவசம் அளிப்பதில் அல்ல.

பெரியார் பெருமை சிறுதகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் - தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார்
அல்லல் களைப எனின்.                 நாலடியார்  170
பொருள்: பெரியோர்க்குப் பெருமை தருவது, எளிமையையுணர்த்தும் செருக்கிலாப் பணிவுடைமையாகும். ஆராய்ந்து பார்க்கும்போது தம்மைச் சார்ந்தவரின் வறுமைத் துன்பத்தைப் போக்குவாராயின் செல்வம் உடையவரும்; செல்வரே ஆவர். (பெரியோர் பணிவுடைமையும், அடக்கமுடைமையும், ஈகைத் தன்மையும் உடையவராவர் என்பதும், ஆதலின் அவரைப் பிழைத்தல் தகாது என்பதும் கருத்தாகும்). 
கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்
பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்
மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத
பித்தனென் றெள்ளப் படும்.                   நாலடியார்  340
பொருள்: ஒருவன் கற்ற கல்வியையும், அவனது மேன்மையையும், நற்குடிப் பிறப்பையும் அயலார் பாராட்டிக் கூறினால் பெருமையாம். இவ்வாறின்றித் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்வானாயின், அவனுக்கு மைத்துனர் (கேலி பேசுவோர்) பலராவர். மேலும் அவன் மருந்தாலும் தணியாத பித்தன் என்றும் இகழப்படுவான். (தற்புகழ்ச்சியும் பேதைமைத்தே என்பது கருத்து)