Saturday, 17 November 2012

NALADIYAR BASED MORAL STORY-8


STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN

THANKS TO Prof.J.SRI CHANDRAN FOR HIS EXPLANATION TO THE POEM


த்யானம் 
ஜிநசந்திரன் என்றொருவர் வாழ்ந்து வந்தார். கல்வி கேள்விகளில் சிறந்தவர். ஆதிபகவனின் சிறந்த பக்தர்.
ஆதீஸ்வரர் ஆலயம் இருக்கும் தெருவில்தான் அவரது வீடும் இருந்தது. தினமும் ஆலயம் செல்வார். வழிபடுவார். கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வார். கோவிலுக்கு வருபவர்களிடம் அன்பாக பழகுவார். அவர்களுக்கு ஏதேனும் தேவையென்றால் முகம் சுழிக்காமல் உதவி செய்வார்.
அந்த நல்லவருக்கு, ஒரு மனக்குழப்பம். தன்னால் அமைதியாக அமர்ந்து த்யானம் செய்ய முடியவில்லையே என்கிற கவலை.
ஒருநாள் மாலை ஜிநாலயத்திற்கு அருகில் ஓடும் ஆற்றின் படித்துறை ஒன்றிற்கு சென்றார். அந்த மாலை நேரத்தில் எவரும் ஆற்றிற்கு வர மாட்டார்கள் என நினைத்தார்.
அந்த இடம் அமைதியாக இருந்ததால், த்யானம் செய்ய ஏற்ற இடம் என்று அவருக்கு தோன்றியது, அங்கேயே அமர்ந்து, “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார். அப்பொழுது, ஒரு பெண் அங்கே குளிக்க வந்தாள்.

உடனே, ஜிநசந்திரன் கண்களை மூடிக்கொண்டு, “ஓம் ஜிநாய நம” என்று சொன்னார். அந்தப் பெண் அருகே வருவது அவளது கொலுசின் ஓசையால் அறிய முடிந்தது.
அட என்னது இது? என்று நினைத்துக் கொண்டு, இரு கைகளாலும்  காதுகளை மூடிக்கொண்டார். அதற்குள் அவள் அருகாமையில் வந்து விட்டாள், அவள் தலையில் வைத்திருந்த மல்லிகை வாசம் வந்தது.
இதனால் சலிப்படைந்த ஜிநசந்திரன், தனது தோளில் போட்டிருந்த அங்க வஸ்திரத்தை (துண்டு) எடுத்து கண், காது, மூக்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு “ஓம் ஜிநாய நம” என்று அமைதியாக சொன்னார்.
“அந்தப் பெண் போயிருப்பாளோ, எதுவும் அறிய முடியவில்லையே” என்று நினைத்தார்.
புரிந்ததா! அவரால் ஏன் த்யானம் செய்ய முடியவில்லை என்று.

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
விலங்காது வீடு பெறும்.                     நாலடியார் – 59

Meaning:மெய், வாய், கண், மூக்கு, செவி எனப் பெயர் பெற்ற ஐந்து புலன்களை அடக்கி, அவற்றின் வழியாக வரும் மிகுந்த ஆசையை மனக் கலக்கமின்றித் தன்னிடம் சேராமல் பாதுகாத்து, நல்லொழுக்கத்தில் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடுபேறு அடைவான்

Sunday, 11 November 2012

Naaladiyar Based Moral Story-7


றந்தும் வாழ்பவர்கள்

ஒரு ஊரில், வீரசேனன் என்கிற செல்வந்தர் வாழ்ந்து வந்தார், செல்வந்தரென்றாலும் கஞ்சர். எச்சில் கையால் காக்கை ஓட்டாத மனிதர் என்று சொல்வார்களே அதைப் போன்றவர்.
அவர் தினமும் தனது கஜானாவில் (கருவூலத்தில்) சேர்ந்துள்ள காசு, பணம், நகை மூட்டைகளை கணக்கிட்டு வைத்துக் கொள்வார்.
அதே ஊரில், ஜெயசேனன் என்பரும் வாழ்ந்தார். அவர் ஒன்றும் செல்வந்தர் இல்லை. ஆனாலும் தனக்கு கிடைக்கும் திரவியத்தைக் கொண்டு, தானும் சிக்கனமாக செலவு செய்து பிறருக்கும் தேவையானவற்றை தானமாகத் தருவார்.
கோடைக்காலங்களில் வழிப் போக்கர்களுக்கு உதவும் வகையில் தண்ணீர் பந்தல் அமைப்பார் ஜெயசேனன். அதற்கு தண்ணீர் கொண்டு வர வேலையாள் ஒருவரையும் அமர்த்தி, அவருக்கு சம்பளமும் கொடுத்தார்.
“ஏன், நீ சம்பாதித்த பணத்தையெல்லாம் இவ்வாறு வீணடிக்கிறாய், தண்ணீர் குடித்த எவரும் உனக்கு எவ்விதத்திலும் உதவ மாட்டார்கள்” என்று செல்வந்தரான வீரசேனன், ஜெயசேனனுக்கு அறிவுரை கூறினார்.
இந்த அறிவுரையைப் பொருட்படுத்தாது, ஜெயசேனன் தொடர்ந்து அறப்பணிகளில் தனது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை செலவழித்தார்.
ஒருநாள், வழக்கம் போல வீரசேனன் தனது கருவூலத்தில் நகை, பண இருப்புகளை சரிபார்க்கும் பொழுது ஒரு மூட்டை பணம் குறைவதாக தோன்றியது. உடனே, அவருக்கு வியர்த்தது, பேச்சு வரவில்லை. சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்து இறந்து போனார்.
வீரசேனன் இறந்ததை கேள்விப் பட்டு, ஜெயசேனன் வருத்தப்பட்டார். பிறகு, தண்ணீர் பந்தலுக்கு நிரந்தர கட்டிடம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். அது போதாதென்று நினைத்தவர், அங்கே ஒரு கிணறு ஒன்றினையும் ஏற்படுத்தினார். இதனால், நிரந்தரமாக எப்பொழுதும் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க வழி கிடைத்தது.
அப்பொழுது, தண்ணீர் பந்தலுக்கு தினமும் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிய நபர், “ஏனிப்படி செய்தீர்கள், எனக்கு இனி வேலையில்லையே! நான் என்ன செய்வேன்” என்று கேட்டார்.
அதற்கு ஜெயசேனன், “நிறைய பணம் வைத்திருந்த வீரசேனன் யாருக்கும் தராமல் பணத்தை அப்படியே விட்டு விட்டு இறந்து போனான், புல் நுனியிலுள்ள நீர்த்துளி போன்று நிலையில்லாத் தன்மையுடையது இந்த வாழ்க்கை; அது போல் நானும் இறந்து போனால், இந்தத் தண்ணீர் பந்தல் இல்லாது போகும், அதற்காகவே எனது இறப்பினாலும் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்தேன். கவலைப் படாதே, இந்தக் கட்டிடத்தையும், கிணற்றையும் நிர்வகிக்கவும் பராமரிக்கவும் உன்னை அமர்த்துகிறேன்” என்றார்.
உணர்ச்சிப் பெருக்கிட்ட அந்த வேலையாள், “அய்யா, உங்களுக்கு மறைவே இல்லை. நீங்கள் இறந்தபின்னும் வாழ்வீர்கள்” என்று வாழ்த்தினான்.

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்            நாலடியார் – 29


விளக்கம்: ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; தன் உறவினர் அலறி அழ இறந்தான் என்று கூறப்படுவதால், புல் நுனியிலிருக்கும் நீர்த்துளியைப் போல நிலையில்லாத தன்மையுடையது இந்த உடம்பு என்று எண்ணி, இப்பொழுதே அறவினைகளைச் செய்க

Naladiyar is the collection of poems (400 in numbers) created by Jain monks. This naladiyar is made simple by these stories.

Tuesday, 30 October 2012

NALADIYAR BASED MORAL STORY-6


அறிவார்ந்தவர் யார்?


அன்று சித்திரை மாதம் அக்ஷய திருதியை, பகவான் ஆதீஸ்வரர் வீதி உலா வந்து கருப்பஞ்சாறு அருந்தும் வைபவம். ஆதீஸ்வரர் ஆலயத்தில், சப்பரம் என்னும் சிறு தேரினை தயார் செய்து வைத்திருந்தனர். சப்பரத்தினை இழுத்துச் செல்ல ரிஷபம் (காளை) தயாராய் இருந்தது.
கோவில் இருந்த தெருவில் ஒரு முனையில் காவேரி ஆற்றின் கிளையாறு ஓடியது, ஆற்றங்கரையில் பன்றி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அங்கே வந்த ஒரு நாய், அந்தப் பன்றியைப் பார்த்துக் குரைத்துக் கொண்டே துரத்தியது.
நாயைப் பார்த்த பன்றி, சிறிதும் பயப்படாமல், “ஏய், நாயே! சும்மா குரைக்காதே! உன் வழியில் செல், நான் யாரென்று உனக்குத் தெரியாது” என்றது.
அதற்கு நாய், “ஏய், நீ யாரென்று யாருக்குத்தான் தெரியாது, இன்னும் சற்று நேரத்தில், ஊர்வலம் இந்த வழியாக வரப்போகிறது, இங்கே நில்லாது ஓடிப்போய் விடு” என்றது.
பன்றியும் சளைக்காமல், “நாயே, ஊர்வலத்தில் சப்பர பட்டறையை இழுக்கும் காளை மாடு கூட என்னைக் கண்டு பயந்து ஓடும், நீயோ சிறு நாய், இங்கிருந்து செல்” என்றது.
நாயோ, குழப்பம் அடைந்து, “நீ சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது, இங்கிருந்து ஓடிவிடு” என்றது.
பன்றி, “நீ நம்பவில்லை என்றால் என் கூடவே வா” என்றது.
நாயும் ஒன்றும் புரியாமல், பன்றியின் பின்னாலே செல்ல ஆரம்பித்தது. கோவில் வாசலில் நின்றிருந்த காளை, பன்றி அந்த வழியே செல்லும் பொழுது, ஒதுங்கி வழிவிட்டு நின்றது.
பன்றியோ செல்ல வழியிருந்தாலும் காளைக்கு அருகாமையிலேயே கோவிலின் வாசலைக் கடந்தது. காளையும் தன்னை ஒடுக்கிக் கொண்டு வழி கொடுத்தது.
காளை ஏன் இப்படி பன்றிக்கு பயப்படுகிறது என்று நாய்க்குப் புரியவில்லை, பன்றியை தொடருவதை விட்டு விட்டு, காளையிடம் காரணத்தை வினவியது.
காளையோ, “நான் ஆதிபகவனின் ரிஷப வாஹனம், சப்பரத்தை இழுப்பதற்காக குளித்து சுத்தமாக வந்துள்ளேன். பன்றியோ சேற்றிலும் சகதியிலும் விழுந்து புரண்டு அழுக்காக உள்ளது, அது என்னைத் தொட்டு விட்டால் நான் மீண்டும் குளிக்க வேண்டும், அதனால் வீதி உலா தாமதமாகும், அதைத் தடுக்கவே பன்றிக்கு வழி விட்டேன்” என்றது.
அப்பொழுதுதான் நாய்க்கு, காளையின் செயலுக்கும் பன்றியின் அறிவீனத்திற்கும் காரணம் புரிந்தது.

மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ்வழி விட்டாங்கோர்
அஞ்ஞானம் தந்திட்டு அதுவாங்கு அறத்துழாய்க்
கைஞ்ஞானம் கொண்டொழுகும் காரறி வாளர்முன்
சொன்ஞானம் சோர விடல்                        நாலடியார் 311

விளக்கம்: ஞான நூல்களை அறிந்தோர் அவையில் சேர்ந்து ஒன்றைத் தெரிந்துகொள்வதை விட்டு, அங்கே ஓர் அறிவற்ற பேச்சைப் பன்னிப் பன்னிப் பேசி அதையே நிலைநாட்ட முற்படும் சிற்றறிவாளர் முன்னிலையில், தமது அறிவார்ந்த சொல்லைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக

Tuesday, 23 October 2012

NALADIYAR BASED MORAL STORY-5



STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN


ஸ்ரீதரன் என்னும் மாணவன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி விடுமுறையில் இருந்தான். நன்றாகப் படிப்பவன். பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் நல்ல மரியாதை கொடுப்பான்.
வயது வந்த பல மாணவர்களுக்கு இருப்பது போன்று இவனுக்கும் தன்னுடன் படிக்கும் ஸ்வேதா என்னும் மாணவி மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதை அவன் காதல் என்று நினைத்தான்.
தேர்வு முடிவு வந்தது. மாவட்டத்திலேயே முதல் மாணவனாக ஸ்ரீதரன் தேறியிருந்தான். அதைத் தொடர்ந்து பொறியியற் கல்விக்கான நுழைவுத் தேர்வு முடிவும் வெளியாகியது. ஸ்ரீதரன் ஐ.ஐ.ட்டி-ல் சேருவதற்கு தகுதி பெற்றிருந்தான். வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
ஸ்ரீதரனுக்கோ, ஒரு புறம் மகிழ்ச்சி. வீட்டை விட்டு, ஊரை விட்டு வெளியூரில் படிக்க வேண்டுமே என்கிற கவலை மறுபுறம். முக்கியமாக ஸ்வேதாவை பிரிய வேண்டும் என்கிற வருத்தம். எப்படியாவது, என்ன காரணம் சொல்லியாவது ஐ.ஐ.ட்டி. செல்லுவதை தவிர்க்க வேண்டும் என்று யோசித்தான்.
மறுநாள் காலை ஆற்றிற்கு குளிக்க சென்றான். அங்கே ஒரு சிறுவன் கரையில் அமர்ந்து, ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் தனது தந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஸ்ரீதரன், தனது குழப்பத்திலேயே, அந்தச் சிறுவன் அருகிலேயே அமர்ந்து இருந்தான். ஐ.ஐ.ட்டி. க்கு போகலாமா? இங்கேயே இருக்கலாமா? எது சரி என்று முடிவெடுக்க முடியாமல் குழம்பியிருந்தான்.
அப்பொழுது அந்தச் சிறுவன் திடீரென்று, ஆற்று நீருக்குள் இறங்க எத்தனித்தான். அவனது அப்பா, “இங்கே பாசம் வழுக்கும், வெளியே போ, மேலே போன்றார்.
இந்தப் பேச்சினால் சிந்தனை கலைந்த ஸ்ரீதரன் இது தனக்காக சொல்லப்பட்ட தகவலாக நினைத்தான்.
அவர் சொன்னது, “வழுக்கிவிடுகின்ற பாசி இங்கே தண்ணீரில் இருக்கிறது, எனவே தண்ணீரை விட்டு வெளியே போ, படியில் மேலே ஏறு” என்ற பொருளில்.
இவனோ, “இங்கே நம் ஊரில் ஸ்வேதா மீது நீ வைத்த பாசம் உன்னை வழுக்கி விடும், அதனால் வெளியூருக்கு போ, போய் படித்து மேலே முன்னேறு” என்று எடுத்துக் கொண்டான்.
ஐ.ஐ.ட்டி. சென்று படித்து முன்னேற முடிவு எடுத்தான்.

குடருங் கொழுவுங் குருதியும் என்பும்
தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே
வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள்
எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள்.
           நாலடியார் - 46

Meaning: குடலும், கொழுப்பும், இரத்தமும், எலும்பும், ஒன்றோடொன்று சேர்ந்திருக்கின்ற நரம்பும், தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசைகளும் நிணமும் ஆகிய இவைகளுள், குளிர்ந்த மாலை அணிந்த பெண் என்பவள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவள்?
இத்தகைய பொருள்களின் சேர்க்கையான உடம்பில் பற்று வைத்து நோக்கத்தை விடக் கூடாது என்பது கருத்து 

Friday, 12 October 2012

NAALADIYAAR BASED MORAL STORY-4


4.எப்பொழுதும் துன்பமில்லை
STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN

4. எப்பொழுதும் துன்பமில்லை (35)

குணசாகரர் என்ற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார், சாஸ்திரங்கள் பலவும் படித்து முனிசங்க கோட்பாடு தவறாமல் வாழ்ந்தவர் அவர்.
அவருக்கென்று ஆசிரமம் கிடையாது, தங்குமிடம் கிடையாது. ஊர் ஊராக செல்வார். அங்கங்கே இருக்கும் மரத்தடியிலோ, மலைக்குகையிலோ தங்கிக்கொள்வார்.
அந்தந்த ஊரில் உள்ள மக்களிடம் அன்பாக பழகுவார். அஹிம்சையை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துக் கூறுவார்.
நமது உயிர் வாழ வேண்டும் என்பதற்காக, பிற உயிர்களை பலி கொடுக்கக் கூடாது என்று அறிவுறை கூறுவார். எந்தக் கடவுளும் விலங்குகளை பலி கேட்பதில்லை என்று விளக்குவார்.
இவ்வாறாக அழகாபுரி என்னும் ஊருக்கு அந்த் முனிவர் ஒருநாள் வந்து சேர்ந்தார். அந்த ஊரில் சந்திர சேகர சாஸ்திரி என்கிற வேத விற்பன்னர் ஒருவரும் வாழ்ந்து வந்தார்.
அழகாபுரி மக்களும் குணசாகர முனிவரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டனர். அவர்கள் குணசாகரரின் பிரசங்கத்தை கேட்பது சந்திர சேகருக்கு பிடிக்கவில்லை. தனது செல்வாக்கு குறைவதாக உணர்ந்தார்.
அந்த மக்கள், புலால் உண்ணுவதைத் தவிர்க்க ஆரம்பித்தனர். தனது உடல் நலம் பேண, வேறொரு உயிரை சாகடிப்பது என்பது தவறு என்பது அவர்களுக்கு புரிந்தது.
குணசாகரரும், மக்கள் அன்புடன் கொடுக்கும் உணவையே விரும்பி சாப்பிட்டார். ஒரு நாள், முனிவர் ஒரு நீண்ட சொற்பொழிவாற்றப் போகிறார் என்று அவ்வூரின் மக்கள் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் அவருக்கு காணிக்கை கொடுப்பதற்காக நிறைய பழங்களும், தின்பண்டங்களும், ஆபரணங்களும் எடுத்து வந்திருந்தனர்.
இதனால், சந்திர சேகர சாஸ்திரிக்கு ஏகப்பட்ட எரிச்சல். இப்படியே சென்றால், தனக்கு மரியாதையே இல்லாது போய்விடும் என்று நினைத்தார்.
அங்கே, சொற்பொழிவு முடிந்தவுடன், மக்கள் தங்களது காணிக்கைகளை கொடுத்தனர். சாகர முனிவர் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனக்கு ஒருவேளைக்கு சாப்பிட மட்டும் தருமாறு கேட்டார்.
அப்பொழுது ஒருவர், இந்தத் தின்பண்டங்கள் கெட்டுப்போகாது, வைத்திருந்து நாளைக்கும், பிறகும் சாப்பிடலாமே? என்று கேட்டார்.
எனக்கு தேவை என்பது இப்பொழுதுதானே, நாளைக்கு தேவை என்பது மூடத்தனம் அல்லது வெறும் ஆசை மட்டும்தான். யாருக்கோ இன்று தேவையான ஒன்றினை, நானும் பயன்படுத்தாமல், அவர்களுக்கும் தராமல் இருப்பதைப் பற்றி சற்று சிந்தித்தால் ஒரு வகையில் திருட்டாகும்” என்றார்.
எனவே, எனக்கு தற்பொழுது தேவைப் படும் இந்த கனி போதும் என்று ஒருவரிடமிருந்து ஒரு கனியை மட்டும் எடுத்துக் கொண்டார். மற்றவர்கள்  தாங்கள் கொண்டு வந்ததை திரும்ப எடுத்துச் சென்றனர்.
இப்படியாக சிலநாள் கழிந்தது. ஒருநாள், பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் வந்து அந்த ஊர்த்தலைவரிடம் ஒரு புகார் கொடுத்தார். தனது வீட்டிலிருந்த தங்க ஆபரண்ங்கள், பணம் ஆகியவை நேற்றிரவு கொள்ளை போய் விட்டதாகவும், குணசாகர முனிவர்தான் கொள்ளையடித்தார் என்றும் கூறினார்.
இதைக் கேட்டு சிலர் ஆத்திரப்பட்டு வந்தவரைத் திட்டினர், சிலர் முனிவரைத் திட்டினர். நல்லவன் போல நாடகம் போடுபவன் ஒரு திருடனா! என்றனர்.
சந்திர சேகர சாஸ்திரி, “நாம் போய் முனிவரிடம் கேட்போம்” என்றார்.
ஊர்த்தலைவரும் அதைச் சரியென்றே சொன்னார். புகார் ஒன்று வந்தபின் யாருக்கும் விதி விலக்களிக்கக் கூடாது, சோதனை செய்வதே சரி என்றார்.
ஊர் மக்கள் அனைவரும் முனிவர் இடத்திற்கு சென்றனர். சோதனை போடும் முன்னரே, அங்கே ஒரு துணி மூட்டை இருப்பது தெரிந்தது. இது என்ன மூட்டை எனக் கேட்டதற்கு, முனிவர் தனக்குத் தெரியாது என்றார்.
அந்த மூட்டையை பிரித்ததில், திருட்டுப் போனதாக சொல்லப்பட்ட நகைகள் அதில் இருந்தன. அதைப் பார்த்த மக்கள் கொதித்தனர், ஏய், வேஷக்கார முனியே, இங்கிருந்து உடனே ஓடிப்போய்விடு, இல்லையானால் நாங்கள் உன்னைக் கல்லால் அடித்துக் கொன்று விடுவோம் என்றனர்.
ஊர்த்தலைவர், “அனைவரும் பொறுங்கள், நான் விசாரிக்கிறேன்” என்றார். சந்திர சேகர ஸாஸ்திரி, “எதற்கு விசாரணை, கண் கூடாகப் பார்த்தாயிற்றே?” என்றார். முனிவர் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்தார்.
ஆனாலும், ஊர்த்தலைவர் பிராது கொடுத்த பக்கத்து ஊர்க்காரரை எப்பொழுது திருடு போனதாக கேட்டார். அவர் நேற்றிரவு என்று சொன்னார்.
அப்பொழுது, அந்த ஊர்க்காவலர், “அய்யா, இவர் சொல்வது பொய். நான் ஊர்க்காவல் செய்யும் பொழுது முனிவரையும் காவல் காப்பேன். நேற்றிரவும் அதே போல், வந்து வந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். முனிவர் இதே இடத்தில் தரையில் படுத்திருந்தார்” என்றார்.
உடனே ஊர்த்தலைவர் புகார் கொடுத்தவரைப் பார்த்து, “ஏன் இவ்வாறு பொய் புகார் கொடுத்தீர்கள்” என்று கேட்டார்.
வந்தவரும் தனக்கு எதுவும் தெரியாது என்றும், சந்திர சேகர ஸாஸ்திரி இவ்வாறு செய்யச் சொன்னார் என்றும் கூறினார். தற்பொழுது மக்கள் அனைவரும் சாஸ்திரியையும், வந்தவரையும் வைய ஆரம்பித்தனர். முனிவரோ, அவர்களை மன்னித்து விடுங்கள் என்றார்.
ஊர்த்தலைவர், “அய்யா, எவ்வாறு உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்ட பொழுதும் எவ்வாறு உங்களால் அமைதியாக இருக்க முடிந்தது” என்று வினவினார்.
“சுலபம், இந்த மக்கள் தின்பண்டங்களை கொண்டு வந்தபொழுது, நான் ஏற்றுக்கொள்ள வில்லை, என்னவாயிற்று?” என்றார்.
“கொண்டு வந்ததை திரும்ப எடுத்துச் சென்றோம்” என்றனர் மக்கள்.
அதைப் போலத்தான் இதுவும். இந்தக் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, கொண்டு வந்தவரே, கொண்டு வந்தததை திரும்ப எடுத்துச் செல்கின்றார்” என்றார் முனிவர்.

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்;
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ திலர்                        நாலடியார் -35
பொருள்: கரும்பை ஆலையில் ஆட்டி, சாறெடுத்து, வெல்லக் கட்டியை நல்ல பதத்திலே கொண்டவர்க்ள், அந்தக் கரும்பின் சக்கை தீப்பற்றி எரிந்தால் துன்புற மாட்டார்கள். அதுபோல, முயன்று நல்லறம் செய்து பிறவிப் பயனைப் பெற்றவர் எமன் வரும்போது துன்பமடையார்.

Thursday, 11 October 2012

NAALADIYAAR BASED MORAL STORY-2




2.என்றும் இளமை
STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr/Lawr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN
ஒரு ஊரில் சீனுவாசன் என்கிறவன் இருந்தான். அவனுடன் அவன் தாய், தந்தையும் வாழ்ந்து வந்தனர்.
அவனது மனைவி வசந்தா என்பவள், தன் மாமனார், மாமியாரை மதிக்கவே மாட்டாள். அவர்கள் இருப்பதே தண்டம் என்று கருதினாள்.
அவர்களுக்கு பழைய சோற்றினைத்தான் போடுவாள். சாம்பார், தயிர், பொறியல் போன்றவற்றை தான் சாப்பிட்ட பின் மீந்திருந்தால் மட்டுமே தருவாள். அவளிடம் ஒரு பழைய, நசுங்கிய அலுமினிய பாத்திரம் ஒன்று இருந்தது, அதில்தான் பழைய சாதத்தினை தருவாள்.
இதையெல்லாம் சீனுவாசனும் கண்டுகொள்வதில்லை. சீனுவாசனின் பெற்றோர்கள் சீனுவாசனை தனியாக சந்திப்பதையே வசந்தா தவிர்த்தாள்.
“ஏன் பழைய சாதத்தினையே தருகிறாய்” என்று சீனுவாசனின் தாய் ஒரு நாள் கேட்டதற்கு, வயதான கிழவிக்கு, இதுவே அதிகம்தான். இதை மட்டும் சாப்பிடுங்கள், இதற்கு மேல் சாப்பிட்டால் தாங்காது” என்றாள்.
சீனுவாசனின் தாயாரும் அதற்கு மேல் ஒன்றும் பேசப்பிடிக்காமலும், பேச முடியாமலும் சும்மா இருந்துவிட்டார்.
சீனுவாசன், வசந்தாவிற்கு ரவிக்குமார் என்கின்ற ஒரு மகன் இருந்தான். அவன் 5 வயது குழந்தை. ஒருநாள், வசந்தா ரவிக்குமாரை கடைத்தெருவிற்கு அழைத்துச் சென்றாள். அங்கே, ஒரு கடையில் பாத்திரங்களை வாங்கிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது ரவிக்குமார், “அம்மா, பழைய பாத்திரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டான்.
“அதெல்லாம் இங்கே கிடைக்காது கண்ணா, ஏன் கேட்கிறாய்?” என்று கேட்டாள்.
“இல்லையம்மா, எங்கு கிடைக்கிறது என்று இப்பொழுதே நான் தெரிந்து கொண்டால்தானே, பிறகு வாங்க முடியும். இல்லையென்றால் நான் பெரியவனானவுடன் எவ்வாறு எந்தப் பாத்திரத்தில் உனக்கு சாப்பாடு கொடுக்க முடியும்! நீ பட்டினி கிடப்பாயே, பாவம்” என்றான்.
“யார் உனக்கு இவ்வாறு சொன்னது? பாட்டியா?” என்று கோபமாகக் கேட்டாள் வசந்தா.
“நீதானேம்மா, பாட்டியிடம் சொன்னாய்! வயதானவர்கள் பழைய பாத்திரத்தில் பழைய சாதத்தைத்தான் சாப்பிட வேண்டும், இல்லையென்றால் தாங்காது என்று” அப்பாவியாக சொன்னான் ரவிக்குமார்.
சுரீர் என்றது வசந்தாவிற்கு. வீட்டிற்கு வந்தவுடன் மாமனார், மாமியாருக்கு  ஒழுங்காக பணிவிடைகள் செய்யலானாள்.

மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
நற்காய் உதிர்தலும் உண்டு                    நாலடியார் – 19


விளக்கம்: நல்லறங்களைப் பின்னர் ஆராய்ந்து செய்வோம். இப்போது இளைஞராக இருக்கிறோம் என்று நினையாமல், பொருள் இருக்கும்போதே மறைக்காமல் அறத்தைச் செய்யுங்கள். ஏனெனில், கடுங்காற்றால் நன்கு பழுத்த பழங்கள் விழாமலிருக்க, நல்ல காய்கள் உதிர்தலும் உண்டு.

பெருங்காற்று வீசும்போது பழங்கள் உதிராமல் இருக்க, காய் உதிர்வது போல, வயதானவர் பிழைத்திருக்க வாலிபர் இறத்தலும் உண்டு. ஆதலால் இப்போது இன்பங்களை அனுபவித்து, வயது முதிர்ந்த பின் நல்லறங்களைச் செய்து கொள்வோம் என்று நினையாமல் பொருள் கிடைத்த போதே அறம் செய்ய வேண்டும் என்பது கருத்து 

Tuesday, 9 October 2012

NAALADIYAAR BASED MORAL STORY-1


1.செல்வம் நிலையாமை
STORY BASED ON THE TAMIL MORAL POETRY "NAALADIYAAR"
STORY BY Engr.A.SRI VIJAYAN
EXPLANATION TO POEM BY Prof.J.SRI CHANDRAN
ஒரு ஊரில் முத்து என்கிற ஆண்டி ஒருவன் வாழ்ந்தான். அவனுக்கு ஒரு மகன். தன் மகனை மிகவும் செல்லமாக முத்து வளர்த்தான்.
தன் மகன் கேட்ட உணவுகளையெல்லாம், பிச்சையெடுத்தாவது வாங்கி வந்து கொடுத்து விடுவான் முத்து. அவனை ஒரு ராஜா வீட்டு பிள்ளை என்று அடிக்கடி கொஞ்சி மகிழ்வான்.
"மகனே, ராஜா, நீ பின்னாளில் பெரிய மனிதனாக வரவேண்டும். இந்த ஊருக்கே, நாட்டுக்கே ராஜாவாக வேண்டும்; மக்களுக்கு நிறைய நல்லது செய்ய வேண்டும், யாரும் ஆண்டியாக இருக்கக் கூடாது” என்பான்.
இதைக் கேட்டு, கேட்டு வளர்ந்த ஆண்டியின் மகனும் தன்னை ஒரு ராஜா போல நினைத்துக் கொண்டான். நன்றாக படித்து, புத்திசாலியாகவும், சாமர்த்திய சாலியாகவும் வளர்ந்தான்.
வளர்ந்து பெரியவனானவுடன், தனது புத்தி சாதுரியத்தினாலும், கல்வி கேள்விகளாலும் அந்நாட்டு அரசனைக் கவர்ந்து, நாட்டுக்கு அமைச்சராக ஆனான். அதில் அவனுக்கு அதிக பெருமை. அந்நாட்டின் தலைமை அமைச்சரின் பெண்ணை திருமணம் செய்தான்.
தினமும் தங்கக் கிண்ணியில்தான் வகைவகையான சாப்பாடு, அதுவும் அவன் மனைவியே ஊட்டிவிடுவாள். இந்த ராஜ போக வாழ்க்கையில், தான் ஒரு ஆண்டியின் மகனாக இருந்ததை மறந்து விட்டான், கர்வம் வந்து விட்டது.
தருமம் செய்ய வேண்டும் என்பதையே மறந்து போனான், யாரையும் மதிப்பதில்லை. எவர் வந்து உதவி கேட்டாலும் துரத்தி விட ஆரம்பித்தான். தனது ஊழியர்களை எடுத்தெறிந்து பேசினான். இதனால் ஊழியர்களும், தோழர்களும் அவனை வெறுக்கலாயினர். அரசனோ, இவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததால், அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை.
ஒரு நாள், ஒரு நந்தவனத்தில், அவன் அதீத போதையில் இருந்த பொழுது, அவனது உதவியாள், சில கடிதங்களில் கையொப்பம் போடுமாறு கேட்டான். அவ்வாறே, கையொப்பம் இடும்பொழுது, “ஐயா, உங்களுக்கு அரசராக எல்லாத்தகுதியும் இருக்கிறது” என்றான்.
ஏற்கனவே, மது மயக்கத்தில் இருந்தவனுக்கு   இதைக் கேட்டதும், மிகுந்த மகிழ்ச்சியாகி விட்டது. “உனக்கு என்ன வேண்டும், கேள்” என்றான். அதற்கு அந்த உதவியாள், “எனக்கு எதுவும் வேண்டாம், ஐயா. அரசரிடம் சில கையொப்பம் வாங்க வேண்டியுள்ளது, அவருக்குப் பதிலாக நீங்களே போடுங்களேன்” என்று நயவஞ்சகமாக பேசினான்.
“நீ சொல்வது சரிதான்” என்று கூறி சில அரசு ஆணைகைளிலும், சில கடிதங்களிலும் கையொப்பம் இட்டான். அந்தக் கடிதங்களுல் ஒன்று, வேற்று நாட்டு ஒற்றர் தலைவனுக்கு, தனது நாட்டில் ஒரு இடத்தை ஒதுக்குவதாகவும், அங்கே வந்து தங்கியிருந்து, தகுந்த நேரம் வரும் பொழுது தனது நாட்டின் மீது படையெடுக்குமாறும் எழுதியிருந்தது. இதைப் படிக்காமலே ஒப்பம் இட்டான்.
பின் அதைப் பெற்றுக் கொண்ட அந்த உதவியாள், நேராக அரசரிடம் சென்று அவற்றைக் காண்பித்தான். சில நாட்களாக், தானே அரசனென்று அவன் கூறிக் கொள்வதாகவும், வேற்று நாட்டு ஒற்றர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தான்.
இதனால் கோபமடைந்த அரசர், உடனே தனது அமைச்சரை கைது செய்ய ஆணையிட்டான்.
சிறைக்கு சென்ற பின்தான், தான் ஆண்டி முத்துவின் மகன் என்பதே ஞாபகம் வந்தது. தான் யாருக்கும் உதவி செய்யாமலும், மதிக்காமலும் இருந்ததே இந்நிலைக்குக் காரணம் என்பதை உணர்ந்தான்.

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்
றன்று.                 நாலடியார்    1

விளக்கம்: ஆறு வகைச் சுவை உணவை அன்புடன் மனைவி உண்பிக்க, ஒரு கவளமே கொண்டு, மற்றவற்றை நீக்கியுண்ட செல்வர்களும் வறியராகி, வேறோர் இடம் போய், எளிய கூழ் உணவை இரந்து உண்பர். ஆதலால் செல்வம் நிலையானது என்று கருதத்தக்கதன்று